கரூரில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தையொட்டி காவல்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு நாடகம் – எமதர்மன், பூதகணங்களுடன், போதையில் வாகனத்தை தாறுமாறாக இயக்கி அப்பாவிகள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது போல தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வு.

சர்வதேச போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கரூர் நகர காவல் நிலையம் மற்றும் தனியார் அறக்கட்டளை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கரூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. மதுபோதையில் தாறுமாறாக 4 சக்கர வாகனத்தை இயக்கி சாலையில் சென்ற மாற்றுத் திறனாளி மற்றும் பள்ளி மாணவர்கள் மீது மோதி விபத்து ஏற்படுத்தியது போலவும், போதையில் வாகனத்தை தாறுமாறாக இயக்கிய நபர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தது போலவும்,

அப்பாவி மாற்றுத்திறனாளி மற்றும் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தது போலவும் அவர்களை எமதர்மன் மற்றும் பூத கணங்கள் வேடமணிந்த நபர்கள் மது போதையில் இருந்தவர்களை தாக்கி, உயிரிழந்த அப்பாவிகளை சொர்க்கத்திற்கும், விபத்துக்கு காரணமான போதை ஆசாமிகளை நரகத்திற்கும் அழைத்துச் செல்வது போன்று தத்ரூபமாக நடித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பேருந்தி நிலையம் மற்றும் அதன் வெளிப்பகுதிகளில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நிகழ்த்தி காட்டினர். இதனை சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் ஆச்சரியத்துடன் கண்டனர்.இந்த நிகழ்ச்சியில் கரூர் நகர துணை கண்காணிப்பாளர் செல்வராஜ் கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் துணை காவல் ஆய்வாளர் நாகராஜ் மற்றும் போக்குவரத்து நகர காவல் ஆய்வாளர் உள்ளிட்ட காவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.








